சமூக இடைவெளியை கடைபிடிக்க குடை:அதிகாரிகள் ஆலோசனை

விசாகப்பட்டினம்: கொரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க குடையை பயன்படுத்தலாம் என ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்



நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39 பேர் வரையில் பலியாகி உள்ளனர். இதனையடுத்து மத்தியஅரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மக்களின் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்பவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள துணை கலெக்டர் சிவ சங்கர் தற்போது கொளுத்தும் வெயிலில் இருந்தும் , மக்களிடையே குறைந்த பட்ச தூரத்தை கடைபிடிக்கவும் குடை உதவும் என கூறி உள்ளார்.


மேலும் நகரத்தில் பணிபுரிந்துவரும் டாக்டர் ஒருவர் துணை கலெக்டரின் கருத்தை ஆதரித்துள்ளார். அவர் கூறுகையில் ஒருவர் குடையை பயன்படுத்தும் போது மற்றவர்கள் அவரிடம் இருந்து தானாகவே சமூக இடைவெளியை கடைபிடிப்பர் என்றார்.

மற்றொரு டாக்டர் கூறுகையில் கொரோனா வைரசில் இருந்து உங்களை காப்பாற்ற குடை உதவுமோ இல்லையோ கண்டிப்பாக வெயிலில்இருந்து தற்காத்து கொள்ள உதவும் என்றார். தொடர்ந்து அவர் வெளியில் செல்லக்கூடிய நபர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என கூறினார்.