கேரளாவில் கொரோனா தொற்றின் மையமான காசர்கோடு

திருவனந்தபுரம்: கேரளாவின் காசர்கோடு மாவட்டம் கொரோனா தொற்றின் மையமாக மாறியுள்ளது. கேரளாவில் உறுதிசெய்யப்பட்ட கொரோனா வழக்குகளில் கிட்டத்தட்ட பாதியளவு அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் இதுவரை 241 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட பாதி பேர் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் மட்டும் 128 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் 90 பேர் வளைகுடா நாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவார்கள். இது மாவட்ட நிர்வாகத்தை மேலும் கவலையடைய செய்துள்ளது. மாவட்டம் முழுமையும் சீல் வைக்கப்பட்ட நிலையில் உள்ளது மற்றும் இரண்டு மூத்த ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை சரிபார்க்கின்றனர்.



கேரளாவில் பொதுவாக 300 பேருக்கு ஒரு டாக்டர் வீதம் இருப்பர். ஆனால், அதிக மக்கள் தொகை அடர்த்தியான காசர்கோடில் 1500 பேருக்கு டாக்டர் என்னும் நிலையிலேயே உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஈ.சந்திரசேகரன் கூறுகையில், வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்களை குறைந்தது 3 முதல் 4 வாரங்களாவது தங்கள் வீடுகளில் தனிமையில் தங்குமாறு நாங்கள் மன்றாடினோம். பலர் எங்கள் ஆலோசனையைப் பின்பற்றினர், ஆனால் சிலர் அதை மீறினர். இதனால் மாவட்டமே அதற்கு விலை கொடுத்து வருகிறது, என்றார்.